தமிழ் நாள்காட்டி
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-201514-ஆம் பதிவு
நாள்: 04.11.2015
பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 11-வது முழுநிலவு வியப்பிலும் வியப்பை ஏற்படுத்தி வெற்றிபெற்ற நிலவாக 27.10.2015 அன்று கடந்தது. கடந்த ஆண்டில் இல்லாத புதுமையாகத் தொடர் சரிவிலிருந்து முறை மீண்ட நிலவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல 29 நாட்களில் வந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 28-ஆம் நாள் முக்கால் வட்டமாக இருந்த நிலவு 29-ம் நாளில் முழு வட்டமாக விரைந்து வளர்ந்து விட்டது. ஆயினும் நள்ளிரவு 11.17-க்கு உச்சி வானைக் கடந்து விட்டது. இது முழு நிலவுக்கு முதல் நாளின் அறிகுறியாகும்.
27.10.2015 அன்று நள்ளிரவு 12.14-க்குத் தெளிவாகக் கடந்தது. விடியும் வரை தாக்குப் பிடித்தது. மழை பெய்தபடியால் முன்னிரவைக் கணிக்க இயலவில்லை. இவ்வாண்டில் தஞ்சையில் இருந்து கணித்த அளவில் மழையினால் கணிப்புத் தடைபட்ட முதல் நிலவே 11-வது முழு நிலவுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
மீண்டது எப்படி?
வழக்கமாகத் தை முதல் நாளே மீண்டு எழும் நிலவாகத் தோன்றிய அண்மை ஆண்டுகளில், அதற்கு முன்பான சரிவுத் திங்களில் நிலவு மீண்டெழுவது இது முதல் முறை. இது மாந்த முயற்சியா பிற உயிர்களின் முயற்சியா என்பதனை அறுதியிட்டுக் கூறத் தற்போது இயலாது. ஆயினும் இது வரவேற்கத் தக்கது என்ற அளவில் கணக்கிட்டுக் கொள்ளலாம். எந்த முழுநிலவும் தடுமாற வேண்டும் என்று யாரும் கருத மாட்டார்கள். தடுமாறுவதையும் நிலை நிமிர்வதையும் அறியாது இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.
பஞ்சாங்க நாட்கள்:-
மறைநிலவு (அமாவாசை) மற்றும் முழுநிலவு (பவுர்ணமி) இவை இரண்டுக்கும் இடைப்பட்ட திதிகள், பிரதமை முதல் சதுர்த்தசி வரை பதினான்கு. இந்த வாய்ப்பாட்டை இதுவரை ஒருவரும் கைவைத்து மாற்றவில்லை. அதன்படி ஓராண்டுச் சுழற்சியில் மொத்த நாட்களின் எண்ணிக்கை 360 என்று பஞ்சாங்கத்தாரும் மறுக்கவில்லை. இன்று இந்தத் திதி தோன்றவில்லை என்று எவரும் சொல்லவில்லை. சொன்னால் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள்.
முழுநிலவு = 12
மறைநிலவு = 12
திதிகள் 24×14 = 336
——–
மொத்தம் 360
———
குழப்பம் எதனால்?
குழப்பம் எதனால் விளைகிறது எனில், வந்த பின் கணக்கிட வேண்டிய முழுநிலவுக் கணக்கை, வரும் முன்னே முந்திக் கொண்டு கணிப்பதனால்தான் என்று இப்போது கூறலாம்.
காத்திருந்து முடிவுசெய்தல்:
தமிழர்கள் தங்களது மரபுவழியில் முழுநிலவுகளைக் காத்திருந்து அறியும் வழக்கத்தை மீட்க வேண்டும். முழுநிலவு நாளைக் கண்டபின் அந்த நாளைத் தவிர்த்துச் சரியாக 11-ம் நாளின் அளவும் காத்திருந்து மூன்று நாட்கள் நோன்பிருந்து மறு நாளில் மறைநிலவு நாளில் விளக்கேற்றி அதன் மறுநாள் மூன்று நாளும் காத்திருந்தால் அன்று மாலையில் மூன்றாம் பிறை தோன்றும். அந்த மூன்றாம் பிறை வெள்ளிக்கிழமையாகவும் வார இறுதி, திங்கள் இறுதி, ஆண்டு இறுதியாக அமைந்து அடுத்த வார, திங்கள், ஆண்டுப் பிறப்பை ஞாயிற்றுக் கிழமைகளில் உறுதி செய்யும். இதுவே பின்பற்ற வேண்டிய நடைமுறை.
REPORT THIS AD
பாவை நோன்பு:-
மார்கழி முழுநிலவைத் தாண்டித் தொடர்ந்து வரும் நாட்களில் முறையே முதல் 11 நாள் காத்திருந்து, 3 நாள் நோன்பிருந்தும் மறைநிலவில் விளக்கேற்றியும் அடுத்த 3 நாட்களில் பிறையினை எதிர்பார்த்தும், அதன் மறுநாளைத் தைப் புத்தாண்டு என்று பொங்கலிட்டுக் கொண்டாடியும் அதனைத் தொடர்ந்த 12-ம் நாளில் அதாவது மார்கழி முழுநிலவு கழிந்த 30-ஆம் நாளில் பூச முழுநிலவில் தைந்நீராடி நோன்பை நிறைவு செய்வதும் பாவை நோன்பை மீட்கும்.
12வது முழுநிலவு:-
27.10.2015-ல் 11வது முழுநிலவு அமைந்து விட்டபடியால் இன்னும் 30 நாட்களில் 12-வது முழு நிலவை வரும் 27.11.2015-ல் எதிர்பார்க்கலாம். ஒருவேளை ஒருநாள் குறைவுற்று 26.11.2015-ல் அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. எது எப்படியாயினும் 12-வது முழுநிலவு உறுதி செய்யப்பட்ட மறுநாளில் பாவை நோன்பை விரும்புவோர் தொடங்கி விடலாம். அடுத்த மறைநிலவானது வரும் 11.11.2015 அன்று அமையும் என்று இப்போது கணிக்கலாம்.
தலைப்பூப்பு:-
பாவை நோன்பு என்பது தலைப்பூப்பு எய்தாச் சிறுமிகளால் விளையாட்டாகக் கடைப் பிடிக்கப்படுவது என்று தெரிகிறது. ஏனெனில் பூப்பெய்திய பின் பூப்புச் சுழற்சிக்கு உட்பட்ட மகளிரால் 30 நாட்கள் தொடர் நோன்பு கடைப்பிடிக்க இயலாது என்பது கருதத்தக்கது.
முதல் மழை:-
தலைப்பெயல், ஆடுமழை எனப்படும் ஆண்டின் முதல் மழையானது தை முதல் நாளுக்கும் 12-ஆம் நாளுக்கும் இடையில் மலை முகட்டில் இறங்கி, அதன் புனல் தைந்நீராடுவதற்கு வந்து சேரும் என்பதே புதிய புரிதல்.
கொண்மூஏறு:-
முதல் மழை இறங்கும் நாளின் மறுநாள், மழை இறங்கும் இடத்திற்கு நேர் மறு பாதியான உலக உருண்டையின் கடற்பரப்பில் காற்றுக் கலைந்து அடுத்த ஆண்டின் மழைக்கான கொண்மூஏறு கருக்கொள்ளும் என்றும் தெரிகிறது. 12 திங்கள் கருத்தாங்கிய நிலையில் குறித்த இடத்தில் குறித்த நாளில் பெய்யும் மழையே தமிழ் மரபின் பிணித்த மழையாகும்.
முதல் மழை பெற்ற காடு:-
தளிபெறு தண்புலம் என்று அழைக்கப்படும் முதல் மழைபெறும் காட்டில் செழிப்பான நிழல் தரும் ஆண் மரத்தின் அடியில் கடம்ப மாலையணிந்து நிற்கும் ஓர் ஆண் மகன் முருகனாக அறிமுகப் படுத்தப் படுகிறான் திருமுருகாற்றுப் படையில்.
அதாவது மழையை விரட்டி வந்து அதனை உரிய இடத்தில் இறங்கச் செய்தபின் அந்த வீரன் தோன்றும் கோலம் அங்கு அவ்வாறு சுட்டப்படுவதாகக் கொள்ளலாம்.
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை – 1
வான்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித் – 2
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து – 3
இருள்படப் பொதுளிய பராஅரை மராசுத்து – 4
உருள் பூந் தண்டார் புரளும் மார்பினன் – 5 (திருமுருகாற்றுப் படை 8-12)
சரியாக மழை கருக்கொள்ளும் நாள்:-
ஆண்டின் முதல் மழை விழும் நாள் தைப்புத்தாண்டின் முதல் நாளுக்கும் பூச நிலவுக்கும் இடையில் அமைவது போல, அடுத்த மழை கருக் கொள்ளும் நாள் என்பது தை மறை நிலவு நாளில் அமைகிறது என்று கணக்கிடலாம். அது நோன்புக்குரிய நாளாக அமைகிறது.
அறிகுறி:-
முதல் மழை கருக்கொள்ளும் அறிகுறியை, இலக்கண முறைமையின் அமைந்த திருமகளிரின் கன்னக் கதுப்பு உறுதி பெற்று தோன்றுவதிலிருந்தும், நெற்றியில் தோன்றும் மினுமினுப்பிலும் அன்று பாணர்கள் தெரிந்து கொண்டனர். இன்று இந்த நுட்ப அறிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டியது தமிழ் மரபின் மருத்துவர்கள் கடமை.
இனிய தமிழ்ப்புத்தாண்டு:-
பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் தமிழாக வாழ்ந்த பேராசான். ‘பாய்புலியே எங்கே உன் சீற்றம்’ என்று தலைப்பிட்டு 21 பாடல்களை 1969-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். அது தமிழ்ப்புத்தாண்டு பற்றியது இல்லை ஆயினும் இன்று அது அதற்குப் பொருந்துகிறது என்பது கருதிப் பார்க்க வேண்டிய ஒன்று.
எம் தமிழ் மொழி பேணி வருக நீ யாண்டும்
இழந்த நின் பேராற்றல் எழ அது தூண்டும்
வெந்திறல் ஆண்மையோடு நீ எழல் வேண்டும்
வீழ்கின்ற பகையோடு அடிமை உனைத் தாண்டும்
(நூல் கனிச்சாறு பக்-96)
அயலவர் சூழ்ச்சி நீ அறியாத கலையா?
அடிமைக்கு வாய்ச்சோறு நீ பெறும் விலையா?
புயல் போலும் பகைசீறின் உனக்கு அது மலையா?
போவார்க்கும் வருவார்க்கும் நீ வாழைக் குலையா? (14)
அரசியல் வாழ்வு எனில் புளுகுதல் அறமா?
அயலவர் முன்னர்உன் சொற் சோர்வு மறமா?
முரசு அறைந்து அரசோச்சல் நீ கல்லாத் திறமா?
முக்கால எல்லைக்கும் நீ பீற்றல் முறமா? (8)
மாந்தரின் இனத்துளே முதலவன் நீதான்!
மற்று இந்நாள் உலகினில் கடையவன் நீதான்!
வேந்தனாம் அன்று நீ எனின் இன்று ஓர் ஈதான்,
வெட்கிலையா மனம்? பிறர்க்கு நீ ‘சீ’ தான் (5)
விடுதலைப் பயிர்க்கு எரு மொழியின் முன்னேற்றம்!
வீணர்க்கும் சோம்பர்க்கும் விளைவுண்டோ மாற்றம்?
படுதலைப் பட்டு ஆயிற்று; ஏன் தடுமாற்றம்?
பாய்கின்ற புலி ஏறே! எங்கே உன் சீற்றம்? (21)
தமிழ்ப்புத்தாண்டுக் காவல்:-
பாவலரேறு போன்ற முதன்மைத் தமிழறிஞர்கள் சுற்றி வளைத்துக் காக்கப்பட வேண்டியவர்கள். அத்தகு புலமை மரபினர்க்கு வளையம் அமைக்கும் வரை தக்காரைத் தேடி மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் உறண்டை இழுக்கும். அதாவது உடைத்துப் பேசும். இக்கால வேளையில் தமிழ் மகனும் தமிழ் மகளும் திருமகனாகவும் திருமகளாகவும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதே தமிழ்ப்புத்தாண்டினை வரவேற்கும் தகுதியைப் பெற்றுத் தரும். கடந்த 27.10.2015-ல் வந்த, இவ்வாண்டின் 11ஆம் முழுநிலவு கார்த்திகை முழுநிலவாகும். இது 30 நாட்களாக நிமிர்வுப் பெற்றுள்ளது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. 11-வது முழுநிலவுக்குப் பிறகு தமிழ்ப்புத்தாண்டுக்கு இன்னும் (30+18=48) 48 நாட்களே உள்ளன. அதில் ஒருநாள் குறையலாம். தமிழர்கள் உறக்கம் கலைய வேண்டும்.
இது மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவைய 2015 வெளியீடு
https://thamizharthonmaipanpadu.wordpress.com/2015/11/06/11/
Comments
Post a Comment